துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

15.10.09

18நாட்கள்,10நாடுகள்.......(1)

பயணத் தொடருக்கு ஒரு கட்டியம்:

பதினெட்டு நாட்கள்!
நான் நானாக மட்டுமே இருந்த பொன்னாட்கள்!

இந்தப் பிரபஞ்சத்தோடு...அதுகாட்டும் புதுமைகளோடு...உலகத்தின் தலை சிறந்த பல அதிசயங்களோடு,இயற்கை அற்புதங்களோடு,மனித அறிவின் உச்சகட்ட ஆக்கங்களோடு உறவாடிய நாட்கள்!

அவை ஏற்படுத்தும் மாயக் கவர்ச்சிகளோடும் -
இனிமையானதும் ......சிலபொழுதுகளில் கிலேசமானதுமான மனக் கிளர்ச்சிகளோடும் செலவிட்ட நாட்கள்!

அவற்றின் பின்னணியிலிருக்கும் வரலாறு,புவியியல்,மற்றும் சமூகத் தகவல்களோடு மட்டுமே ஊன் கலந்து உயிர் கலந்து ஒன்றிப் போயிருந்த நாட்கள்!

இறந்த காலம் மறந்து ,எதிர்காலம் தொலைத்து, நிகழ்கால நொடிகள் ஒவ்வொன்றையும் ஜென் கதையில் இடம்பெறும் தேநீர் பருகும் சடங்கைப்போலச் சொட்டுச் சொட்டாக ரசித்தபடி அவற்றில் மட்டுமே தோய்ந்து கரைந்து வாழ்ந்திருந்த நாட்கள்!

வாயிலில் அலறும் அழைப்பு மணிகளுக்கும்,அலைபேசிகளுக்கும் பதிலளிக்க அவசியமின்றி உள்ளுக்குள் மட்டுமே மூழ்கிக் கொண்டு புறத்தை ரசிக்கப் பாதை வகுத்துக் கொடுத்த பொன்னாட்கள்!

அடுத்தடுத்த வேலை என்று மனம் அடுக்கடுக்காக ஆணையிட்டுக் கொண்டே வரும் அன்றாடநியதிகளிலிருந்து சற்றே விலகி நின்று,அப்போதைய கணத்தை மட்டுமே ஆசை தீரப் பருகி மகிழ்ந்த அரிய நாட்கள்!

நினைவு மலர்ந்த நாள் முதல் தொடர்ச்சியாக இத்தனை நாட்கள் - கணநேரப்பதட்டமோ..கவலையோ இல்லாமல் இருந்ததே இல்லையே என்பதை ஆச்சரியத்தோடு நினைவுபடுத்திக்கொள்ள வைத்த அதிசய நாட்கள்!

இனியொரு முறை இது வாய்க்குமோ என எண்ணி எண்ணி ஏங்க வைக்கும் வைக்கும் இனிய நாட்கள்!


என் ஐரோப்பியப் பயணத்தில் எனக்கு வாய்த்த அற்புத நாட்கள் அவை!

கடமைகள்...பொறுப்புக்கள்...சுமைகள் என ஏதுமின்றிப் பதட்டங்கள் சிறிதுமின்றிப் பயணப்பொறுப்பாளர்களிடம் முழுமையாக ஒப்புக்கொடுத்துவிட்டுப் புறக் காட்சிகளைக் காணுவதும்....அவற்றைப் புகைப்படக்கருவியில் பதிவதும் மட்டுமே தொழிலாக.....
அறுபது வயதில் ஆறு வயதுக் குழந்தையாக நான் மாறிப் போய்விட்டிருந்த அந்த அபூர்வக் கணங்களை ......
நாள் வரிசைப்படி தொடர்ச்சியாக வலையில் முன் வைக்கிறேன்.

முதலாம் நாள்:
இலங்கை-கொழும்பு


இலங்கை,பிஞ்சுப் பருவம் முதலாகவே என் நெஞ்சுக்கு நெருக்கமாகியிருந்த ஒரு நாடு.தமிழகத்து மக்களுக்குக்கதை படிப்பதைத் தவிர வானொலி மட்டுமே வீட்டுப் பொழுதுபோக்காக இருந்த ஐம்பதுகளில்,இலங்கை வானொலியே என் உற்ற துணையாகவும்,தோழமைக்கான கருவியாகவும் இருந்து வந்திருக்கிறது.
இலங்கைத் தமிழும், இலங்கையின் பல ஊர்ப்பெயர்களும் நினைவு தெரிந்த நாளிலிருந்தே இலங்கை வானொலியின் அப்போதைய மதுரத் தமிழ்க்குரல்கள் வழி (முதல் கட்டத்தில் மயில் வாகனன்,பிறகு கே.எஸ்.ராஜா) எனக்கு நன்கு அறிமுகமாகி நேசத்திற்குரிய இடத்தைப் பெற்றிருக்கின்றன.
பிறகு, தமிழ் இலக்கியத் துறையில் கால் பதித்த பிறகு,கம்பன் காட்டிய இலங்கை, அடுத்த கட்ட வளர்ச்சியாக நவீன இலக்கிய ஈடுபாட்டுக்குப்பின்பு இலங்கைப் படைப்பாளிகள் , திறனாய்வாளர்கள் ஆகியோரின் எழுத்துக்களில்கொண்ட ஆர்வம்,சமூக அக்கறை கொண்ட நபராக இலங்கை அரசியலின் மீதுகுறிப்பிட்ட கவனம் என இலங்கையைப் பற்றிய என் பார்வைகள் விரிவடைந்துகொண்டே வந்தபோதும்,அங்கே கால் பதிக்கும் வாய்ப்பு மட்டும் வாய்க்காத ஒன்றாகவே இருந்து வந்தது.

சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் மேற்கொண்ட மலேசியா,சிங்கப்பூர் பயணத்தின்போதுதான் முதன்முதலாக இலங்கையை நான் எட்டிப் பார்த்தேன்.அப்போதும் கூட அது,விமானம் மாறுவதற்கான இடைப்பட்ட சிறிதுநேரத் தங்கல்தானே ஒழிய விமான நிலையம் தாண்டி,இலங்கைக்குள் செல்ல வாய்ப்பிருந்திருக்கவில்லை.கண்ணடிக்கதவுகள் வழியே இருட்டாகத் தெரியும் இலங்கை மண்ணையும்,கட்டுநாயகாவிலுள்ள பண்டாரநாயகா விமானநிலையப் பெயர்ப்பலகையையும் வெறித்துக் கொண்டிருக்கத்தான் முடிந்தது.

ஈழவிடுதலையின் இறுதிக் கட்டப் போர் உக்கிரமாகத் துவங்கியிராத அந்த டிசம்பர் மாத நள்ளிரவுப் பொழுதொன்றில்-கிட்டத்தட்ட மூன்று மணிநேரக்காத்திருப்பில்....விமான நிலையத்திற்குள்ளாகவே சுற்றி வந்து கொண்டிருந்தேன் நான்.தமிழ் தெரிந்த சிங்களக் காவலர் ஒருவரோடு சகபயணி ஒருவர் உரையாடிக்கொண்டிருக்க அதில் நானும் போய்க் கலந்து கொண்டேன்.அதற்குச் சற்று முன்புதான் மும்பை தாஜ் ஓட்டல் முற்றுகை நடந்து முடிந்திருந்ததால் அதைச் சுட்டிக் காட்டிய அந்தக் காவலர் ‘’உங்கள் நாட்டில் மட்டும் குண்டு வெடிப்புக்கள் இல்லாமலிருக்கிறதா என்ன?’’என்று மடக்கிவிட்டுப் பொதுமக்களாகிய தாங்களெல்லாம் தமிழர்,சிங்களர்,இசுலாமியர் என்ற பேதம் கொஞ்சமுமின்றி வாழ்ந்து வருவதாகவே உணர்ச்சி பொங்கக் கூறினார்.
அவர் கூறியதை எப்படி நம்பாமலிருக்க முடியும் என்று தெரியவில்லை.ஆட்சியிலுள்ளவர்களின் ஆதிக்கப் போக்குக்கும் சராசரி மனித மனப்போக்குக்கும் இடையே இட்டு நிரப்பமுடியாத இடைவெளி இருப்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான்.
அப்போது கிறிஸ்துமஸ் விழாத் தருணமென்பதால் விமான நிலையம் மிக அழகாகவும்,ஆடம்பரமாகவும் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
டிசம்பர் மாத நள்ளிரவுத் தங்கலில்....


அந்த அலங்காரங்களை விடவும் அங்கிருந்த குழந்தை ஏசுவின் குடிலும்,அருகிலிருந்த புத்தர் சிலையும் எனக்குள் என்னென்னவோ ரகசிய செய்திகளை ஓதிக் கொண்டிருந்தன.


அன்பையும் அகிம்சையையும் உயிராய்க் கொண்ட அந்தத் திரு உருவங்கள் அங்கே மௌனசாட்சியாக இருந்தது எதற்காக என்பது...,பொருள் விளங்காத ஒரு புதிராகவே எனக்குப்பட்டது.

அந்த நள்ளிரவுத் தங்கலுக்குப் பின்--மிகக் கடுமையான பாதுகாப்புக் கெடுபிடிகள் பலவற்றைக் கடந்து அடுத்த விமானம் நோக்கிச் சென்று விட்டதால் ஓரளவு ஆற அமரக் கூட இலங்கையைக் காணவும் அசைபோடவும் அப்போது சமயம் வாய்த்திருக்கவில்லை.

தற்பொழுது ஆகஸ்டில் மேற்கொண்ட ஐரோப்பியப் பயணத் திட்டத்தில்-இலங்கைக்கென்றே ஒரு நாள் ஒதுக்கப்பட்டிருப்பதைக் கண்டதும் -என் மனம் சற்றே ஆறுதல் கொண்டது.
இங்கும் கூடச் சென்னையிலிந்து பாரீஸ் செல்லும் வழியில் ஒரு இடைத் தங்கல் மட்டும்தான்.ஆனாலும் பாரீஸ் விமானம் நடு இரவு ஒரு மணிக்கு மேல்தான் என்பதாலும் நாங்கள் சென்னையிலிருந்து காலை பதினொன்றரைக்கே இலங்கையை அடைந்து விடுவதாலும் ஒரு கூடுதல் போனஸாகக் கொழும்புப் பயணம் எங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்தியாவிலிருந்து...அதுவும் தமிழகத்திலிருந்து அங்கே வரும் எங்களுக்கு ஆயிரம் கெடுபிடிகள்...சோதனைகள்...உடல்நலப்பரிசோதனைகள்....! ஒருவழியாக எல்லாம் முடிந்து 06.08.09 நண்பகல் பன்னிரண்டு மணியளவில் கலவையான பல உணர்வுப் போராட்டங்களுடன்...சற்றுக்கனத்த நெஞ்சுடன் இலங்கை மண்ணில் கால் பதித்தேன் நான்.
இலங்கையை நோக்கி....




தமிழினத்தை ஒட்டுமொத்தமாகக் கையசைத்து வழியனுப்பி விட்டேன் என்கிறாரோ?
(விமான நிலையத்திற்கு வெளியே ராஜபக்‌ஷேயின் கட்அவுட்)



(பயணம் தொடரும்)

இணைப்பு பார்க்க:

ஐரோப்பியப் பயணம்
’ஷாலோமுக்கு ஒரு சலாம்’

1 கருத்து :

suresh சொன்னது…

nandri.. thodarungal ungal paniyai..

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....