துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

11.11.08

மெல்லத் தமிழினி நீர்க்கு(ம்)மோ?

இலக்கியக் கல்வியிலும், இலக்கிய ஆய்வுகளிலும் வாழ்வின் செம்பாதிக்கு மேல் செலவிட்டு, அதிலேயே ஊறி உட்கலந்து போனவர்களுக்கு, இன்றைய கல்விச் சூழலில் தமிழ் இலக்கியக் கல்வியும், இலக்கிய ஆய்வுகளும் சிரிப்பாகச் சிரிக்கும் அவலம் கண்டு சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம்' என்று புலம்பத் தோன்றுவதில் வியப்பில்லை. செய்யும் தொழிலில் ஈடுபாடும், கொஞ்ச நஞ்சம் மனச்சாட்சியும் எஞ்சியிருக்கக் கூடிய எவருக்கும் இன்று நேர்ந்திருப்பது இந்த வேதனைதான்!
60களில் நிலவிய தமிழ் எழுச்சிச் சூழலில், மொழியின் மீதும், அதன் இலக்கிய மரபுகளின் மீதும் தீரா வேட்கை கொண்டு, கல்லூரியின் இளநிலைப் படிப்பை (பி.ஏ., பி.எஸ்.சி.,) வேதியல், இயற்பியல், பொருளாதாரம், வரலாறு என வேறுபட்ட துறைகளில் மேற் கொண்டிருந்தாலும் _ அத்துறைகளிலிருந்து விலகி வந்து தமிழ் முதுகலைப் படிப்பை (எம்.ஏ.) ஆராக்காதலுடன் அணைத்துக் கொண்ட தலைமுறை ஒன்று இருந்தது. சங்க இலக்கியத்திலும், காப்பியங்களிலும் கவனம் செலுத்திய சென்ற தலைமுறைத் தமிழறிஞர்களின் (தெ.பொ.மீ., அ.ச.ஞா. போன்றோர்) தொடர்ச்சியாக இன்றைய நவீன இலக்கியத்தின்பால் இத்தலைமுறையின் ஆர்வம் பெரிதும் குவிந்தது. உண்மையான மன எழுச்சியுடன் தேர்ந்து கொண்ட துறை என்பதால் _ கவிதை, நாடகம், பிற படைப்பிலக்கியத் துறைகள், ஆய்வியல் எனத் தமிழின் பல இலக்கியக் களங்களிலும் இத்தலைமுறையைச் சார்ந்தவர்கள் குறிப்பிடத் தக்க முத்திரைகளைப் பதித்தனர்.
தமிழின் இலக்கண இலக்கியங்களைக் கற்றுத் தெளிய வேண்டுமென்ற மெய்யான ஆர்வத்துடன், இளங்கலை (பி.ஏ.) நிலையிலிருந்தே தமிழை விருப்பப் பாடமாக _ விரும்பித் தேர்ந்து கொண்டவர்களும் கூட மேற்குறித்த முதல் சாராரைப் போன்றவர்களே!
70களின் இறுதியிலும் 80களின் தொடக்கத்திலும், தொழிற் கல்விப் படிப்புக்களின் மீது மக்கள் மனங்களில் மோக அலை வீசத் தொடங்கிச் சூறாவளியாய்ச் சுழன்றடித்தது. இக் கடுஞ்சுழல், உண்மையான இலக்கிய ஆர்வமும், தேடலும் கொண்ட இளம் தலை முறையினரையும் கூடப் பொறியியல், மருத்துவம் ஆகிய (வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் அளிப்பதன் வழி பெற்றோரின் மனப்பதட்டத்தைத் தணிக்கக் கூடியதாக எண்ணப்பட்ட) துறைகளின் பால் ஈர்த்துச் சென்றது.
தொழிற் படிப்புக்கள் கிடைக்காத சூழலில் _ கலை, அறிவியல் பட்ட வகுப்புக்களை நாடிவரும் மாணவர்கள், இரண்டாம் நிலை'க் குடிமக்களாக மதிப்பிடப்பட்ட நிலையில், தமிழிலக்கியம் பயில வரும் மாணவர்கள் கடையரிலும் கடைய'ராகக் கருதப்பட்டதில் வியப்பில்லை. இலக்கியப் பிரிவுக்காக ஐம்பது இடங்கள் ஒதுக்கப்பட்டிருந்தால், அதில் விருப்பத்தோடு சேர வருபவர்கள் என்று 10 சதவிகிதம் பேரைக் கூடக் குறிப்பிட முடியாது.
இத்தகைய சூழலில், தங்களுக்கு விதிக்கப்பட்டதை' விருப்பத்தோடு ஏற்றுக் கொள்ள இயலாமல் விதியே' என்று ஊக்கமும், உற்சாகமும் இல்லாதவர்களாகவே அவர்களில் பெரும்பாலோர் மூன்று ஆண்டுகளையும் கழித்துவிட்டுப் போய் விடுகிறார்கள். இந்நிலையைக் காணுகையில், இலக்கியக் கல்வியின் எதிர்காலத்தைப் பற்றி ஒருவகையான அவநம்பிக்கை உணர்வே மேலோங்குவதைத் தவிர்த்துக் கொள்ள முடியவில்லை.
பருவமுறைக் கல்வித் திட்டத்தில் (Semester System) நிலவும் அக மதிப்பீட்டுத் தேர்வு (Internal Evaluation) நீளமாக _ தொடர்ச்சியாக எழுத வேண்டிய கட்டுரை வினக்களில் மதிப்பெண் குறைந்தாலும் ஓரிரு தொடரில் எழுதும் பதில்கள், பத்தி வினக்களுக்கான விடைகள் ஆகியவற்றில் ஈடுகட்டிக் கொண்டுவிடக் கூடிய வினத்தாள் அமைப்பு, குறிப்பிட்ட சில தன்னட்சிக் கல்லூரிகளில் தமிழ் இலக்கியக் கல்வியை மிகமிக எளிமைப்படுத்தித் தரும் பாடத் திட்டம் _ இவற்றால் பிழையில்லாத ஒரு வாக்கியத்தை உருவாக்கத் தெரியாதவர்களும் கூடத் தப்பி'ப் பிழைத்து விடுகிறார்கள்; மேலும் அவர்கள் இளங்கலை, முதுகலைத் தமிழ் பட்டதாரிகளாகத் (சில சமயம் முதல் வகுப்பிலும் கூடத்) தேர்ச்சி பெற்று விடுகிறார்கள். இப்படி ஒரு கேவலம், மாநிலத்திலுள்ள பல கல்வி நிறுவனங்களிலும் வெற்றிகரமாக நடந்தேறி வருவதை எவராலும் மறுக்க இயலாது.
மேலே குறிப்பிட்ட இலக்கியப் பட்டதாரிகள், கல்வியாளர்களாகவும், ஆய்வாளர்களாகவும் வளர்ச்சி பெறும் நிலையில் அவர்கள் வழங்கும் கல்வியும், அவர்கள் மேற்கொள்ளும் ஆய்வும் அரைவேக்காட்டுத் தனமாகவும், தேவைக்குத் தீனிபோடுவதற்காக வலிந்து செய்'யப்படுவதாகவும் மட்டுமே அமைந்து போகிறது.
"தமிழ் எம்ஃபில், பி.எச்.டி ஆய்வுகளைச் சில ஆண்டுக் காலத்திற்காவது நிறுத்தி வைக்க வேண்டும்'' என்று தமிழகத்தின் புகழ் பெற்ற தென்னகப் பல்கலைக்கழகம் ஒன்றின் மூத்த தமிழ்ப் பேராசிரியர் ஒருவர் குறிப்பிட்டதில் பிழையில்லை! ஆய்வுத் தலைப்புக்கள் பலவும் அபத்தத்தின் உச்சங்களாக அமைந்திருப்பவை; உள்ளார்ந்த ஆர்வத்தின் காரணமாக அல்லாமல், வலிந்து செயற்கையாக வருவித்துக் கொள்பவை. ஆய்வேட்டில் உள்ளடக்கம் என்ற பெயரில் இடம் பெறும் கருத்துக்கள், செய்திகளின் பொருத்தமின்மையாலும், வரிசையாக அடுக்கப்பட்டிருக்கும் மேற்கோள் குவியல்களாலும் உண்மையான அறிவுத்தேடல் கொண்டோரைக் கூசிக் குறுக வைப்பவை.
நூற்றாண்டு விழாக் கொண்டாடி விட்ட ஒரு தமிழ்க் கவிஞரைப் பற்றிய எம்.ஃபில் ஆய்வில், அவர் பிறந்த ஆண்டு, 1960களை ஒட்டியதாகக் குறிப்பிடப் பட்டிருந்ததென்பது உண்மையான ஒரு நிகழ்வாகும் (கட்டுரையாளர், அவ்வாய்வேட்டை மதிப்பீடு செய்யும் பொறுப்பை ஏற்றிருந்ததால், அது சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட உண்மை,). பானைச் சோற்றில் பதச் சோறாக உள்ள இந்த ஆய்வேட்டைப் போன்ற பிழை மலிந்த பல ஆய்வேடுகளும் கூட அறிவுச் சந்தையில் விலை போய்விடும் அக்கிரமங்கள், அன்றாட நிகழ்வுகளாகப் பல பல்கலைக் கழகங்களிலும், தன்னட்சிக் கல்லூரிகளிலும் நடந்தேறி வருவதைக் காணும் நடுநிலையாளர்கள் அறச் சீற்றம் கொண்டு குமுறாமல் இருக்க முடியாது.
"படிச்சவன் சூதும், வாதும் பண்ணினல் போவான், போவான் ஐயோவென்று போவான்'' என்று தன் புதிய கோணங்கி'யில் அன்றே சுட்டிக் காட்டினன் பாரதி! அவனது வழித் தோன்றலாகத் தங்களைப் பிரகடனப்படுத்திக் கொள்ளும் இன்றைய நவீன முனைவர்களின் (Ph.D. பட்டம் பெற்றவர்கள்) சூதுவாதுகள் சொல்லில் அடங்காதவை. குதிரை பேரம் நடக்கும் அரசியல் சீரழிவுகளைப் போல, அறிவுலகச் சீரழிவின் அசிங்கமான வெளிப்பாட்டை முனைவர்பட்ட பேர'த்தில் காண முடியும். முனைவர் பட்டப் படிப்புக்கு வழிகாட்டும் நெறியாளர்களிடம் (guides) நிலவும் நெறியற்ற போக்குகள்! மாணவர்களிடமிருந்து வழிகாட்டிகள் எதிர்பார்க்கும் உச்சபட்ச அன்பளிப்புகள் (வைரமாலையைப் பரிசாகக் கேட்கும் அளவு இந்த வெறி முற்றிப் போயிருக்கிறது!), அடித்தொண்டு ஊழியங்கள், தன் பணிகளில் மாணவர்கள் உதவ வேண்டுமென்ற எதிர்பார்ப்பு (வகுப்பெடுத்தல், தாள் திருத்தல் போன்றன), பெண்ணாக இருந்தால் பாலியல் சீண்டல்களுக்கு ஆட்படுத்தல் என்று இவற்றை அடுக்கிக் கொண்டே போக முடியும்.
வழிகாட்டிகளின் போக்குகள் இவ்வாறு இருக்க, ஆய்வேட்டைத் திருத்துபவர்களின் திருவிளையாடல்களோ.... வரம்பு மீறிய அராஜகத்தின் மோசமான வெளிப்பாடுகள். ஆய்வேட்டை மதிப்பீடு செய்வதற்காக முதல் வகுப்புப் பயணப் படியும், ஊதியமும் பெற்றுக் கொண்ட பின்னும் _ விள்ளாமல், விரியாமல் அதைக் கையகப்படுத்திக் கொள்வதற்காக ஆய்வு மாணவரிடமிருந்தே அத்தொகையைத் தண்டல்' செய்யும் சிறுமையின் உச்சம்! அதற்கும் ஆய்வு வழிகாட்டியே வழிகாட்டும் அவலம்! இவற்றுக்கெல்லாம் முத்தாய்ப்பாக முனைவர் பட்டத்திற்கான வாய்மொழித் தேர்வு வெற்றிகரமாக முடிந்தபின், அதற்காக அந்த மாணவர் மகிழ்வோடு (!?) அளிக்கும் அன்பளிப்புக்கள்! (தஞ்சாவூரென்றால் கிலோக் கணக்கில் முந்திரிப் பருப்பு... மதுரையென்றால் சுங்குடிச் சேலைகள் என்று இந்த அன்பளிப்பு, இடத்திற்கேற்ப மாறுபடும்!). தனக்கு வழங்கப்பட்டுள்ள படிச் செலவுக்கு ஏற்றதான ஒரு விடுதியில் தங்கி விட்டுப் போகாமல், ஆய்வு மாணவரின் செலவில் நட்சத்திர விடுதிகளில் தங்குதல்... உணவு மற்றும் பிறஉல்லாசக் கேளிக்கைகள்! இந்த அளவுக்குத் தரத்தைத் தாழ்த்திக் கொண்ட பிறகு, அந்தத் தேர்வாளரின் (Examiner) நம்பகத் தன்மை (Credilility) எப்படிப்பட்டதாக இருக்க முடியும் என்பதை எவராலும் எளிதில் ஊகித்து விட முடியும்!
எல்லா நெறியாளர்களும், தேர்வாளர்களும் இப்படித்தான் இருக்கிறார்கள் என்று சொல்ல முடியாது என்றபோதும் மேற்குறித்த மோசமான மாதிரி'கள் (Samples) கல்விப் பணியின் புனிதத் தன்மைக்குக் களங்கம் சேர்க்கிறார்கள் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடம் இருக்க முடியாது.
பதவி உயர்வுக்காகவும், சம்பள உயர்வுக்காகவும் கல்யாணச் செலவு' செய்து (அண்மையில் ஓர் ஆய்வாளர், இதே தொடரைப் பயன்படுத்தியதைக் கேட்க நேர்ந்தது) _ படிப்பதைத் தவிர பிற எல்லாவற்றையும் செய்து முனைவர் பட்டத்திற்காகப் போராடும்' ஆசிரியர்கள் ஒருபுறம் என்றால், ரூ.25,000/_ கொடுத்து ஆய்வுத் தலைப்பையும், அதற்குரிய முதன்மைச் சான்றுகளையும் (Binary Sources) கொடுத்து விட்டால், சுடச்சுட ரெடிமேட்' ஆய்வேட்டைத் தயாரித்துக் கொடுக்கும் பினமிக் கூட்டமும் இன்று தலையெடுக்க ஆரம்பித்திருக்கிறது.
பட்டம் பெறுவதற்காகச் செய்யப்படும் ஆய்வுகளின் நிலை இப்படி இருக்கிறதென்றால், அண்மைக்காலமாக, ஆய்வு முயற்சிகளுக்குக் கல்வி நிறுவனங்களால் ஏற்பட்டுவரும் நெருக்கடிகளும் குறிப்பிட்டுச் சொல்லத் தக்கவை. சுயநிதிக் கல்வி நிறுவனங்கள் தெருவுக்கு ஒன்றாய்ப் பெருகிவரும் இன்றைய உலகமயக்' கல்விச் சூழலில், தங்களை நிலைநிறுத்திக் கொள்ளும் போட்டியில் முனைப்பாக இயங்க வேண்டிய நிர்ப்பந்தம் அவற்றுக்கு ஏற்பட்டுள்ளது. நாக்' (NAAC) எனப்படும் தேசிய தரமதிப்பீட்டுக் குழுவிடம் தர நிர்ணயம்' பெற்ற நட்சத்திரக் கல்லூரிகளாகவும், ஏ+' கல்லூரிகளாகவும் தங்களைக் காட்டிக் கொள்ளவும், ஐ.எஸ்.ஓ. (ISO) எனப்படும் உலகத்தரச் சான்றினைப் பெறவும், இந்நிறுவனங்களுக்குள் கடுமையான போட்டி நிலவி வருகிறது. இப்போட்டி, ஆரோக்கிய மானதாகவும், நல்லதொரு கல்விச் சூழலை உருவாக்க உதவுவதாகவும் அமைந்தால் அது நல்லதுதான்! ஆனல் அப்போட்டிகளின் மோசமான சில பக்கங்கள், இலக்கிய ஆய்வுகளைக் கேலிக் கூத்தாக்கி விடுவதால் அது குறித்த விமரிசனத்தையும் இங்கே முன் வைக்க வேண்டியதாகிறது.
கல்லூரி ஆசிரியர்களிடமிருந்து தேசிய தரமதிப்பீட்டுக் குழு (NAAC) வால் எதிர்பார்க்கப்படும் முக்கியமான தகுதி, அவர்கள் தேசிய, சர்வதேசக் கருத்தரங்குகளில் பங்கேற்றுக் கட்டுரை வழங்கியிருக்க வேண்டும் என்பதுதான்! கொள்கை அளவில் சிறப்பானதாகத் தோற்றமளிக்கும் இத்தகுதி, அது நடைமுறைப்படுத்தப் படுகையில் மலினமாக்கப்பட்டுக் கொச்சையாகிப் போனதைச் சொல்லவும் நாக்கூசுகிறது. தேசிய தர நிர்ணயக் குழுவின் தகுதிப்பாட்டை எட்ட வேண்டுமென்பதற்காகச் சரியான திட்டமிடல் எதுவுமின்றித் தேசிய', சர்வதேசக் கருத்தரங்கம் என்றபெயரில் _ கல்லூரிகளிலும், பல்கலைக் கழகங்களிலும் சராசரியான தரத்துக்கும் கீழாக நடத்தப்படும் ஆய்வு அரங்கங்கள்! மிக அண்மையில் தொடங்கப்பட்டு, அனுபவ முதிர்ச்சி கூட அதிகம் இல்லாத இளம் ஆசிரியர்களைக் கொண்டிருக்கும் கல்லூரிகளிலும் கூடப் பன்னட்டுக் கருத்தரங்கம்' என்ற பதாகையின் கீழ் நடத்தப்படும் அமர்வுகள்! அவற்றில் பங்கேற்றுக் கட்டுரை வாசிக்கப் பேராளர் கட்டணமாக ரூ.300 முதல் ரூ.500 வரை வசூல் செய்து அக்கட்டுரைகளையோ, கட்டுரைச் சுருக்கங்களையோ எவ்விதமான தணிக்கைக்கும், தரக் கட்டுப்பாட்டுக்கும் உட்படுத்தாமல் நூல் வடிவமாக்கி, அந்த ஆய்வுத் தொகுப்பு நூல்', தமிழ் கூறும் நல்லுலகில் உலா வந்துவிடும் அவலம்!
ஆய்வாளரின் கடும் உழைப்பையும், தேடலையும், புதிய சிந்தனைகளையும் வெளிக்காட்டும் சில கட்டுரைகள், சிப்பிக்குள் முத்தாக _ சில வேளைகளில் அந்த நூல்களிலும் இடம் பெற்று விடுவதுண்டு; ஆயினும் அவற்றின் எண்ணிக்கை, விரல் விட்டு எண்ணக் கூடியதாக மட்டுமே இருக்கும் என்ற உண்மையை எவராலும் மறுக்க முடியாது. முதுகலை நிலையில் தரப்படும் பயிற்சிக் கட்டுரைகளைவிட மோசமான தரம் கொண்ட கட்டுரைகளே மிகுதியாக நிரம்பியுள்ள அத்தகைய ஆய்வு நூல்களைப் புரட்டும் தமிழ் ஆர்வலர்கள், தமிழ்ப் பேராசிரியர்களைப் பற்றி எத்தனை மோசமான மதிப்பீடுகளை மனதில் கொள்வார்கள் என்பதை எளிதாக அனுமானித்து விடலாம்!
எந்தக் குப்பையாக இருந்தாலும், அச்சில் வெளியிடப்பட்டு விட்டால் அந்தக் கட்டுரைகளின் எண்ணிக்கையை வைத்து ஆசிரியரின் தகுதி! எத்தனை கருத்தரங்கங்கள் நடைபெற்றன என்பதை வைத்துக் குறிப்பிட்ட கல்வி நிறுவனத்தின் தகுதி! ஆனல்.... உண்மையான தகுதி' என்பது, எங்கோ ஒளிந்து கொண்டு கண்ணாமூச்சியாடிக் கொண்டிருக்கிறது என்பது மனச்சாட்சிக்குத் தெரிந்த போதும், அதை வெளிப்படையாக ஏற்றுக் கொள்ள மறுக்கும் இலக்கியப் போலிகளின் கையில் இன்றைய இலக்கியக் கல்வி சிக்கியுள்ள சோகத்தை விண்டுரைக்க வார்த்தையில்லை.
நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே' என்று முழங்கிய நக்கீரனை மேன்மைப்படுத்திப் பழம்புராணம் பாடிக் கொண்டிருப்பதும்.... சங்கப் பலகையின் அங்கீகாரத்தைப் பெறுவதற்காகத் திருவள்ளுவரும் கூடப் பாடுபட வேண்டியிருந்ததை விளக்கிக் கொண்டிருப்பதும், இராமாயண அரங்கேற்றம் எதிர்கொள்ள வேண்டியிருந்த கேள்விக் கணைகளைப் பற்றிக் கதைத்துக் கொண்டிருப்பதும் மட்டுமே இன்றைய தமிழ் இலக்கிய ஆசிரியர்களின் பணி இல்லை. உள்ளதன் நுணுக்க'மாய்த் தமிழாய்வைக் கொண்டு செல்வதும், அதற்கான ஊக்க விதைகளை இளம் உள்ளங்களில் தூவுவதுமே வருங்கால இலக்கிய ஆய்வுகள் மேலும் கேலிக்கூத்தாகாமல் தடுக்க உதவும்.
அதனை நோக்கிய முன்னகர்தலின் முதல் கட்டம்..., தன் நெஞ்சறிவது பொய்'யாகி விடாமல் உண்மையான தகுதியை இலக்கிய ஆசிரியர்கள் வளர்த்தெடுப்பதேயாகும். மெய்யான இலக்கிய ஆர்வலர்களின் எதிர்பார்ப்பும் அதை நோக்கியே குவிந்திருக்கிறது. நன்றி :வடக்குவாசல்,ஜூலை,08- இணைப்பு-http://www.vadakkuvaasal.com/

2 கருத்துகள் :

lablaeruken சொன்னது…

I don't have the editor to type in tamil so please excuse my response in English. I am a native of Madurai and did my BE from TCE Madurai and currently completing my doctoral degree. I have myself seen how faculties try to complete PhD for promotion when they do not have even any basic idea of the subject, and go on to become "Professor" and HOD. When I was doing my BE there was a professor who bought his PhD. Even more tragic thing was my sister was affected in a medical degree final viva because more than 40 students have bribed the external examiners and my sister was one of the few who did not pay bribe. Out of the 3 committee members two were bribed and the third one got really mad and failed his batch of students. My sister was an unfortunate victim of this event and that was the only time she had failed in an exam in her entire life and was very withdrawn afterwards for a couple of years. She has been an excellent student right from her Kinder garden and had topped where ever she had studied.

Oru prof/lecturer aana respect is missing due to these people that you had mentioned and even some of the gems get a bad name becaue of this wide spread malaise. The gvernmenet is pouring money into these colleges without overseeing the quality of the product. As always we are obsessed with quantity and the degree for promotion and recognition.

Neenga solradha kekkaradhuku romba kashtama iruku but will hope again that deserving people will get the recogition.

Please write often and I enjoy reading them.

Regards,
-Vijay

பெயரில்லா சொன்னது…

செம கோவத்துல எழுதிருக்கீங்க ? ரொம்ப கவலையா...

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....